Gandhi Jayanti: மகாத்மா காந்தியும் `ஹே ராம்` சர்ச்சையும் – உண்மை என்ன?
- October 2, 2024
- 1
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
உண்மையா என தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
அக்டோபர் 2. டாஸ்மாக் அடைப்பாலும் ஒருநாள் விடுப்பாலும் மட்டுமே அதீத கவனம் பெறும் ஒருநாள். காந்தி ஜெயந்தி. ஆனால், இந்திய வரலாற்றில் இத்தனை நேர்மையான ஒரு தலைவன் இருந்தான் என்று சொன்னால், யாரும் இனி நம்பமாட்டார்கள். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த மகாத்மா காந்தியின் பிறந்ததினம் என்றுதான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இடதும் வலதுமாக அரசியல் அல்லோலப்பட்டுக் கிடக்கும் இந்த- 2024 ஆம் ஆண்டின் – சூழலிலும், எந்தச் சித்தாந்தமும் முழுதாக ஏற்றுக்கொள்ளவும் முடியாத, மறுத்துவிடவும் முடியாதபடிக்கு வியப்பும் விமர்சனங்களும் அமைந்த ஒரு தலைவன் என்றால், காந்தியின் பெயருக்கு நிச்சயம் இடமுண்டு. காரணம், தான் வாழ்ந்த காலம் முழுக்க தான் நம்பிய தத்துவங்களுக்கு உண்மையாக இருந்ததுதான்.
சனாதனம் எல்லோரையும் சமமாக உய்விக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்த காந்தி, உண்மையாகவே சமத்துவம் பேசத்தொடங்கிய போது சனாதனவாதிகளின் (இந்துத்துவம்) பரம விரோதியாக மாறிப்போனார். வாழ்வனைத்தும் `ராம்…ராம்` என்று உச்சரித்தவரை ராமராஜ்யத்தின் பெயரால் கொன்று ஒழித்தது சனாதனவாதம். காரணம் அவர் பின்பற்றி வந்த நேர்மை.
ஆனால், இன்று காந்தியைக் கைக்கொள்ளும் பொருட்டு, அவர் ஒரு சனாதன இந்து என்ற பிரசாரங்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. அதில் ஒன்றுதான், இறக்கும்போதும் அவர் ஹே ராம் என்று சொல்லிவிட்டு மடிந்த ராமபக்தர் என்பது. நான் பள்ளிச்சிறுவனாயிருந்த காலம் முதலே இந்தச் செய்தியை ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் பிறந்தநாளிலும் நினைவுநாளிலும் பலர் சொல்லவும் பகிரவும் கேட்டுள்ளேன். நிச்சயம் நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆனால், அதில் உண்மை உண்டா என்று எப்போதாவது யோசித்ததுண்டா?
“பல செய்திகள், ‘ஹே ராம்’ என்று காந்தி மகான் சொன்னதாக வந்தது. ஆனால், அவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை! இறப்பதற்கு முன் அவர் எந்த வார்த்தையும் சொல்லவில்லை என்பதே எனக்கு ஞாபகம்!” என்று ஜேம்ஸ் மைக்கேல்ஸ் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இப்போது யார் இந்த ஜேம் மைக்கேல் என்ற கேள்வி எழலாம். காந்தி இறந்தபோது, அந்தச் செய்தியை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த முதல் செய்தியாளர் ஜேம்ஸ் மைக்கேல்ஸ் தான். சம்பவத்தின் போது நேரில் பார்த்த சாட்சி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது `யுனைட்டெட் பிரஸ்` என்ற செய்தி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அதன்பிறகு, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் செய்தியாளராக இணைந்து ஆசிரியராக உயர்ந்தார். ஆசிரியராக இருந்தபோது, 1997ல் மும்பையில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் , இந்த ‘ஹே ராம்’ சர்ச்சை குறித்து அவர் அளித்த விளக்கம்தான் மேலே நீங்கள் படித்தது.
`காந்தி கொல்லப்பட்டார். இந்தியாவின் ஆன்மா ஒரு மத வெறியனால் சுட்டுத் தள்ளப்பட்டது’ என்ற தலைப்புடன் தொடங்கும் அந்த காந்தி கொலைச் செய்தி வெளியான செய்தித்தாளை, பெரிதாக பிரேம் போட்டு தன் அலுவலகத்தில் கடைசிவரை மாட்டி வைத்திருந்த ஜேம்ஸ் மைக்கேல், தனது 86 வயதில் காந்தி ஜெயந்தி (அக்.2) இதே நாளில் தான் இறந்தார். அவரது கூற்றுப்படி ஹே ராம் என்று சொல்லிவிட்டு காந்தி இறந்தார் என்பது ஆதாரமற்ற செய்தி. காந்தி இறப்பு குறித்து உடனடியாக அவர் அனுப்பிய செய்தியை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் படிக்கலாம்.
கோபால் கோட்சேவும் மறுக்கிறார்:
காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்றவரும் நாதுராம் கோட்சேவின் சகோதரருமான கோபால் கோட்சே இது குறித்து பேசியபோது, “ இறக்கும்போது ஹே ராம் என்பதை காந்தி சொல்லவில்லை. பென் கிங்ஸ்லிதான் அப்படிச் சொல்லிவிட்டார்” என்று கோபால் கோட்சேவும் தொடர்ந்து தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. (கோபால் கோட்சே டைம் இதழுக்கு அளித்த – “His Principle of Peace Was Bogus” – பேட்டியிலிருந்து )
யார் அந்த பென் கிங்ஸ்லி: 1982 ஆம் ஆண்டு காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தார் ரிச்சர்ட் அட்டன்பரோ. அதில் காந்தியாக வேடமேற்று நடித்தவர் தான் பென் கிங்ஸ்லி. காந்தி இறக்கும்போது ஹே ராம் என்று சொன்னதாக ஒரு திரைப்படம் பதிவு செய்ததை வைத்துக்கொண்டு அதுதான் வரலாறு என்று பேசுவது மூடத்தனம் என்பதை PenPoint News உறுதியாக நம்புகிறது.
மொத்தத்தில், கொலை செய்தவர் தரப்பும் மறுக்கிறது. முதன் முதலில் செய்தி வெளியிட்ட, நேரில் பார்த்த சாட்சியும் மறுக்கிறது. ஆனால், உண்மையா இல்லையா என்றே தெரியாமல், டி,ராஜேந்தருக்கு பொருத்தப்பட்ட டண்டனக்கா போல, காந்திக்கு ஹே ராம் என்ற வாசகம் செருகப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு நாள் விடுப்பும் டாஸ்மாக் அடைப்பும் தான் காந்தி ஜெயந்தி என்கிற பிம்பத்திலிருந்து மீள்வதும் காந்தி தன் இறுதிக்காலத்தில் கனவு கண்ட எல்லோருக்குமான சமத்துவத்தை இந்தியா அடைய பணியாற்றுவதுமே காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:
1. ஜேம்ஸ் மைக்கேல் இறப்பின்போது IJR வெளியிட்ட செய்திக்குறிப்பு- https://indianjournalismreview.com/2007/10/06/james-w-michaels-rest-in-peace/ –
2. கபூர் விசாரணை ஆணைய அறிக்கை – https://archive.org/details/6026201-1969-Report-of- eevan-Lal-Kapur-Commission-of
3. கோபால் கோட்சே பேட்டி – https://time.com/archive/6956143/his-principle-of-peace-was-bogus-2/
4. காந்தி இறப்பு குறித்து ஜேம்ஸ் மைக்கேல் வெளியிட்ட செய்தி – https://web.archive.org/web/20221004072556/https://www.upi.com/Archives/1948/01/31/Cremation-of-Gandhis-body/1311719724408/
1 Comment
அருமையான கட்டுரை. வழக்கமான காந்தி ஜெயந்தி நினைவு கட்டுரைகள் வடிவில் இல்லாமல் முக்கியமான ஒரு செய்தி நீண்ட காலமாக உண்மை என நம்பப்பட்டு வரும் செய்தியின் உண்மையை ஆழ அறிந்து மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த PenPoint க்கு அன்பின் வாழ்த்துகள். இப்படியே தொடர்க பயனுள்ள எழுத்துக்கள் வழியே ❤️.
Comments are closed.