தமிழ்நாடு

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்

  • April 22, 2024
  • 0

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய திருத்தேரோட்டம், பல்வேறு மண்டகப்படிகள் நிறைவுற்றபின், காலை 6.30 மணி அளவில் கீழமாசி வீதியை வந்தடைந்தது.

மதுரை: மீனாட்சி அம்மன் தேரோட்டம்… சித்திரை திருவிழா கோலாகலம்
  • மதுரை மீனாட்சி அம்மன் திருத்தேரோட்டம்
  • ஏப்ரல் 12இல் தொடங்கி 22 வரை நடைபெறுகிறது
  • பக்தர்கள் கோஷத்தில் பரவசமான சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரை மற்றும் அதைச் சுற்றி வாழும் அனைத்து ஊர் மக்களும் தங்கள் சொந்த ஊர்த் திருவிழாவாகவே கொண்டாடும் மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், அழகர் ஆறிரங்கல் என முக்கிய நிகழ்வுகளோடு சேர்த்து நடைபெறும் சித்திரைத் திருவிழாவால் மதுரை மாநகரே விழாக்கோலம் பூணும்.

PenPoint Fact check: பெண் துறவி தாக்குதல் நாடகம் என பரவும் செய்தி உண்மையா?

ஏன் penpointnews.in உருவாகிறது?

இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும், நான்கு மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதைக் காண சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிக்கணக்கான மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 22) கோலாகலமாக நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய திருத்தேரோட்டம், பல்வேறு மண்டகப்படிகள் நிறைவுற்றபின், காலை 6.30 மணி அளவில் கீழமாசி வீதியை வந்தடைந்தது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் ஒரு தேரிலும், மீனாட்சி அம்மன் ஒரு தேரிலும் பவனி வந்தனர்.

அதைத் தொடர்ந்து தெற்கு மாசி வீதி , மேலமாசி வீதி , வடக்குமாசி வழியாக வலம் திருத்தேர்கள் வலம் வந்தன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அடுத்த முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கி வரும் வைபவம் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.