ஜம்மு-காஷ்மீர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளையும் திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதரகத்தை மூடுவதால் என்ன சாதகம் பாதகம் என பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் போது தூதரகத்தை மூடுவது ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கனடா- இந்தியா இடையே ஏற்பட்ட விரிசலின் போது கூட இந்தியா தூதரகத்தை மூடிய தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இது உள்நாட்டில் அரசாங்கத்திற்கு ஆதரவை அதிகரிக்கலாம். தூதரகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது அல்லது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தூதரகத்தை மூடுவது அவசியமாகலாம். எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய போது தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய தூதரகம் மூடப்பட்டது.
தெற்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தூதரகத்தை மூடுவது இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை கடுமையாக பாதிக்கும். இது பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலைக் குறைக்கும். இதனால் தெற்கு ஆசியாவில் சீனாவின் கால் தடம் ஆழமாக பதிய வாய்ப்பளிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைவதால், மற்ற நாடுகள் அல்லது சர்வதேச சக்திகள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இருந்த போதிலும் பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடுவது மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்புவது, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பதற்கான சமிக்ஞையாக அமையும். மேலும், இந்த நடவடிக்கை சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க உதவும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அல்லது கட்டுப்படுத்தத் தவறும் நாடுகளுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்ற செய்தியை இது உலகிற்கு உணர்த்தும்.
காஷ்மீர் தாக்குதல் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இந்த கடுமையான நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், தூதரகத்தை மூடுவதால் ஏற்படும் நீண்டகால பாதகங்களையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜதந்திர உறவுகளை முழுமையாக துண்டிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. பதட்டத்தை குறைக்கவும், பேச்சுவார்த்தைக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கவும் இந்தியா முயற்சிக்க வேண்டியது அவசியம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதும், அதே நேரத்தில் ராஜதந்திர வழிகளையும் ஆராய்வதும் இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும்.