அரசியல்

அதிமுக-பாஜக கூட்டணி ஏன்? மா.செ கூட்டத்தில் போட்டுடைக்கும் ஈபிஎஸ்

  • April 23, 2025
  • 0

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள்

அதிமுக-பாஜக கூட்டணி ஏன்? மா.செ கூட்டத்தில் போட்டுடைக்கும் ஈபிஎஸ்

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. மேலும், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் தோல்வியடைந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “ராயபுரத்தின் முடிசூடா மன்னனாக நான் இருந்தேன். ஆனால், பாஜகவுடனான கூட்டணியால் நான் தோற்றேன்” என பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக தொண்டர்களும் பாஜகவுடனான கூட்டணியை விரும்பவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை என அதிமுக தலைமை அறிவித்தது.

இதன்பின்னர், 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தும், பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணியினர் கூட்டணி அமைத்தும், திமுக அதன் தோழமைகள் கட்சிகளுடன் போட்டியிட்டனர். ஆனால், திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக சில இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. சில இடங்களில் பாஜக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில், அதிமுக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் குறைந்தது 15 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலை சந்திக்கும் என அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம் எனத் தெரிவித்த நிலையில், தற்போது கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மையினரிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் மாவட்டச் செயலாளர்கள் தவிப்பதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி ஏன் என்றும், இது கொள்கை அளவிலான கூட்டணி இல்லை, திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணி தான் என்றும், பாஜகவின் கொள்கைகளை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமாக கூற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மே 2-ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்க உள்ளார்.