செய்தித்துறை இயக்குநர் இனி இவரா?
- May 16, 2026
- 0
தவெக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். யார்?
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட அருண் தம்புராஜ் யார் தெரியுமா?
கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரி செயல்பாடு பிரிவின் திட்ட இயக்குனராக அருண் தம்புராஜ் பணியாற்றிய போது குவாரியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
குவாரிகள் அமைந்துள்ள பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தினார்.
குவாரிகளில் அள்ளப்படும் மணல் முறைகேடு நடைபெறுகிறதா என்பதை சென்னை அலுவலகத்தில் இருந்து நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது குவாரிகளிலும் ரெய்டு நடத்தினார்.
குவாரிகளில் முன்னுரிமை அடிப்படையில் லாரிகள் மணல் அள்ளுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வந்தார்.
டீ என் சாண்ட் என்ற செயலி மூலம் லாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட முன்பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்தார். மேலும் மணல் அள்ள வரும் லாரிகள் தங்களது வண்டி எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாய நடைமுறை ஆக்கினார். இதனால் போலி பதிவெண்ணில் மணல் அள்ளுவதற்கு பதிவு செய்வது தடுக்கப்பட்டது. அவருக்கு நீர்வளத் துறை பொறியாளர்களால் பல்வேறு இடையூறுகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதையும் மீறி துறையில் சாதித்தார்.
தொடர்ந்து அவர் மணல் குவாரிகளின் இருந்து நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே மணல் விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த நிலையில் மணலுக்கு மாற்றாக எம் சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்கும் நடவடிக்கை கடந்த அதிமுக அரசு கையில் எடுத்தது. மணல் குவாரிகள் திறப்பதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பிப்பது நீர்வளத்துறையால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நாகை கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கு சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் சுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டார். தேர்தல் காரணமாக மீண்டும் சேலம் கலெக்டராக மாற்றப்பட்டார். தற்போது செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.