சாயல்குடி அருகே கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மகளை கூலி ஆட்களை ஏவி விட்டு கொலை செய்த மருமகன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில், ஜெர்மின் (35) என்ற பெண் தனது 14 வயது மகள் நிவேதா பெத்தநாச்சி, மற்றும் 10 வயது மகன் திஸ்வர் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கும் ராணுவத்தில் வேலைபார்க்கும் இவரது கணவர் விஜயகோபாலுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து ஆண்டுகளாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று, ஜெர்மின் தனது குழந்தைகளுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். குழந்தைகளின் கண் முன்னே, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ஜெர்மினை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சென்னையில் வசித்து வரும் கொலை செய்யப்பட்ட ஜெர்மினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்து வந்து ராமநாதபுரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் யிடம் தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரியும் மருமகன் விஜயகோபால், கூலி ஆட்களை ஏவி தனது மகளை கொலை செய்தவர்களையும் மருமகனையும் கைது செய்யக்கோரி மனு அளித்தனர்.