News அரசியல் இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

  • July 16, 2024
  • 0

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்

புதுடெல்லி: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 21-ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் காரணமாக, நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனிநபர் வருமான வரி தொடர்பாக புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.