காரியாபட்டி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் – கல்வெட்டில் அமைச்சர், எம்.எல்.ஏ. பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளிக் காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த கூடுதல் மருத்துவமனை கட்டிடம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அன்றைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இருப்பினும், மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால், திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரியாபட்டி பேரூராட்சி திமுக தலைவர், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டு, கூடுதல் மருத்துவமனை கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தின் மூலம் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி, மேம்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அன்றைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர முயற்சி மேற்கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் திறப்பு விழா கல்வெட்டில், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், கல்வெட்டில் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை என்ற விவாதம் தற்போது காரியாபட்டி மற்றும் விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.