தாய் இறந்தபோதும் மக்களுக்காக நின்றவர் – யார் இந்த முபாரக்?
- April 19, 2026
- 0
பிரச்சினைகளில் நேரடியாக களத்தில் நிற்பவர் என்ற அடையாளத்துடன், நன்னிலம் தொகுதியில் ஒரு மாற்று அரசியல் முகமாக உருவெடுத்து வருகிறார்.‘
மக்களுக்கான சமரசமற்ற போர் என்ற சொல்லுக்கு ஒரு முகம் இருந்தால் அது முபாரக்கின் முகம்தான். போராட்டக் களத்தின் உச்ச தருணத்தில், ஒரு அழைப்பு. தாயார் இறந்துவிட்டதாக தகவல். ஆனால், போராட்டத்தில் இருந்து பின்வாங்கவும் இல்லை. களத்தை விட்டு நீங்கவும் இல்லை.
தாய் இறந்தபோதும் மக்களையே சிந்திக்க ஒருவரால் முடியுமா? அதெப்படி? யார் இந்த முபாரக்…
முகமது முபாரக், M.A Political Science படித்த, சமூகப் பொறுப்புள்ள இளம் வேட்பாளராக நன்னிலம் தொகுதியில் கவனம் ஈர்த்துவருகிறார். கல்விப் பருவத்தில் இருந்தே பொதுச்சேவையில் ஈடுபாடு காட்டிய அவர், அரசியல் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்ற நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
தொடக்கம் முதலே விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் காட்டிய முபாரக், பல்வேறு சூழலியல் போராட்டங்களில் பங்கேற்று வந்துள்ளார். குறிப்பாக நதிகள் மீட்பு இயக்கம் மற்றும் நில அபகரிப்பு எதிர்ப்பு போன்ற முயற்சிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில், ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பெரிய அளவில் போராடியவர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார்.
மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் களமிறங்கி செயல்படும் போராளி. விமான நிலையத்திற்காக மக்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று இவர் முன்னெடுத்த காத்திரமான போராட்டங்கள் அவரது அரசியல் தெளிவுக்கும் மக்கள் சார்பும் சான்று. அதேபோல், கூடங்குளம் அணு உலை தொடர்பான பிரச்சினைகளிலும் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவர் என்ற பெயரையும் முபாரக் பெற்றுள்ளார். எந்த நேரத்திலும் பொதுமக்கள் அணுகக்கூடியவராக இருப்பதுடன், நன்னிலம் தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் புகார் மையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கையை முறையாக அமல்படுத்த வேண்டி போராடியுள்ளார். இதன் மூலம் ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தார். மேலும், பொதுச் சிவில் சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பற்ற மனிதநேயத்தை வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
தனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையைத் தாண்டி, பொதுவாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவருக்கு மக்கள் தான் அடையாளம். சமரசமின்றி, சார்பின்றி மக்களின் பிரச்சினைகளில் நேரடியாக களத்தில் நிற்பவர் என்ற அடையாளத்துடன், நன்னிலம் தொகுதியில் ஒரு மாற்று அரசியல் முகமாக உருவெடுத்து வருகிறார்.‘உடன்பிறந்தே கொல்லும் வியாதி’ என மூதுரை சொல்வதுபோல நம் நன்னிலத்தை தொடர்ந்து தாக்கி வரும் வியாதிக்கு மாமலையின் அருமருந்து போல முன் நிற்கிறார் முபாரக்.