ஆபாசமாக ஆடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நவடிக்கை எடுக்கக்கோரி கோயில் அர்ச்சகர் போலீஸில் புகார்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அர்ச்சகர்கள் வீட்டில் ஆபாசமாக ஆடும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம்(30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அதில் ஒரு அர்ச்சகர் ஆபாசமாக ஆடுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அர்ச்சகர் கோமதி விநாயகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் நான் பெரிய மாரியம்மன் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன்.
கும்பாபிஷேகத்தை பொறுப்பேற்று நடத்தி வரும் நிலையில், தனக்கும் தனது குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட சபரிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் . இதுகுறித்து சபரிநாதனிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஸ்ரீ ஆண்டாள் கோவில் செயல் அலுவலரிடம் இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் புகார் அளித்துள்ளார் அந்த புகாரியில் கோயில் அர்ச்சகர் குடிபோதையில் ஆபாசமாக ஆடி வீடியோ வெளியிட்ட மற்றும் வீடியோவில் உள்ள அர்ச்சகர்கள் அனைவரையும் கோவிலில் இருந்து உடனடியாக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
இதனை ஏற்ற செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் அர்ச்சர்கள் அனைவரையும் கோவிலிலிருந்து பணியில் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.