நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு.
நாமக்கல் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் இராம்குமார், செயலாளர் அருள்குமரன், பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில் ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கி ஆன்லைன் வழியாக விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு மறைமுக கட்டணங்களை அந்த ஹோட்டல் உரிமையாளர்களிடம் வசூலித்து வருகின்றனர். இதனால் ஹோட்டல் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும், உணவு விற்பனைக்கான உரிய தொகையை, உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்..
அப்போது ஆன்லைனில் zomota மற்றும் Swiggy ஆகிய பெரும் நிறுவனங்கள் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் பெறுகின்றார்கள், நாமக்கல் தாலுக்காவில் மட்டும் 85 கடைகள் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது, கமிஷனில் வேறுபாடு, வருமானம் இழப்பு விளம்பர கட்டணம் மறைமுக கட்டணத்தால் வருமானத்தில் 50% பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே Zomota மற்றும் Swiggy நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், இதில் உடன்பாடு எட்டவில்லை எனில் வரும் ஜூலை 1 முதல் காலவரையற்ற ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவித்தனர்.
மேலும் ஜூலை 1 முதல் ஆன்லைன் சேல்ஸ்க்கு zomota மற்றும் Swiggy ஆகிய நிறுவனங்களுக்கு உணவு வழங்கா விட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.10 இலட்சம் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தனர்