News சிறப்பு கட்டுரைகள் சினிமா

தாண்டவன் என்னும் கண்ணியமிகு கலகக்குரல் | ஜமா

  • August 7, 2024
  • 0

அண்மையில் வெளியாகி திரையரங்குகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் படம் ஜமா. எளிதில் கணிக்க முடிகிற கதைதான் என்றாலும் திரைக்கதை ஓட்டமும் பாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தை வெற்றி பெற வைக்கும். இது திரை விமர்சன கட்டுரை அல்ல. பாத்திர விமர்சன

தாண்டவன் என்னும் கண்ணியமிகு கலகக்குரல் | ஜமா

அண்மையில் வெளியாகி திரையரங்குகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் படம் ஜமா. எளிதில் கணிக்க முடிகிற கதைதான் என்றாலும் திரைக்கதை ஓட்டமும் பாத்திரங்களின் வடிவமைப்பும் படத்தை வெற்றி பெற வைக்கும்.

இது திரை விமர்சன கட்டுரை அல்ல. பாத்திர விமர்சன கட்டுரை. கூர்மையான விமர்சனங்கள் வலிமையான படைப்பை உருவாக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, வலிமையான படைப்பாளி தன் முதல் படைப்புக்கே கடுமையான விமர்சனங்களை பெறுவான் என்பதும். அந்த வகையில் பாரி இளவழகன் ‘ஜமா’ படத்துக்காக பாராட்டுக்குரியவர். தாண்டவம் என்னும் பாத்திரப் படைப்புக்காக சிறப்புக்குரியவர்.

படத்தில் எதிர்மறை நாயகனாக வரப்போகும் தாண்டவம், முகமாக அறிமுகம் செய்யப்படும் முன்பே, ‘பெயராக’ அறிமுகம் செய்யப்படுகிறார், அவர் இறப்புக்காக காத்திருப்போர் வாயிலாக. துரோகம் செய்து ஜமா (நாடகசபா) பிடுங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதை விளக்கும் கதையின்போது அது துரோகமாகத் தெரிவதில்லை. இளவரசுவுக்கும் தாண்டவத்துக்கும் நடக்கும் உரையாடலின் போது, இது இன்னும் தெளிவாகிறது.

அதாவது, “தொடர்ந்து இளவரசுதானே அர்சுனன் கட்டுறார். இந்த முறை நான் கட்டுறேன்” என்று தாண்டவம் கேட்கும்பொழுது, “இல்லை எனக்கு விருப்பமில்லை. வழக்கத்த மாத்த முடியாது” என்று இளவரசன் பழமைவாதம் பேசுகிறார். அதன் மூலம் தலைவனுக்குரிய தகுதியிலிருந்து தப்பிவிடுகிறார். கூடவே, நிலைமையை கையாளவும் தெரியாமல், இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

அதே வேளை, தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற தன் எண்ணத்துக்கு தோதாக சூழலையும் தகவமைத்துக் கொள்கிறார் தாண்டவம். (ஊரின் அரசியல்வாதிக்கு தன் மகளைத் தர, தானே சென்று சம்மதிப்பது, தலைமைப்பொறுப்பின் மீது ஆசையிருக்கும் இன்னொருவருக்கு 2ஆம் இடத்தை தருவது என).

சாமி என்னைத்தான் ஏற்றுக்கொண்டது பாருங்கள் என்று காட்டிக்கொள்ளவோ, பொய்ச்சாமி ஆடவோ தாண்டவம் தயாராக இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் வரட்டும். நான் வழிநடத்துகிறேன் என்ற தொனியில் தான் அவரது அணுகுமுறை இருந்தது.  அன்றுமுதல் நாடகசபாவும் நடந்து வருகிறது. கலைஞனாக கலகக்குரல் எழுப்பிய முதல் பாத்திரமும் தாண்டவம் தான். 

மகளின் காதல் விவகாரத்தை தாண்டவம் கையாளும் விதம்தான் (அவர் பேசும் அந்தஸ்து விவகாரமும், சொற்களும்) அவரைக் கதையில் வில்லனாக காட்டும் முதல் அம்சம்.

ஆனால் கலைஞனாக, கலையின் மீது தான் கொண்டிருக்கும் வலிமையான பற்றுதலின் விளைவாக, மீண்டும் இளவரசு செய்த அதே தவறை தானும் செய்கிறார் தாண்டவம்.